திருவனந்தபுரம்

கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் லேண்ட் லைன் தொலைப்பேசி இல்லாததால், கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. தவிர தொலைப்பேசி உள்ள பள்ளிகளிலும் யாரும் தொலைப்பேசியை எடுப்பதில்லை என்றும் புகார் கூறப்பட்டது.

இதையொட்டி அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ள உத்தரவில்,

“கேரளாவில் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தரைவழி தொலைப்பேசி கட்டாயம் இருக்க வேண்டும். ஒருவேளை பழுதாகி இருந்தால் அவற்றை உடனே சரி செய்ய வேண்டும். தரை வழி தொலைப்பேசி இல்லாத பள்ளிகளில் புதிதாக இணைப்பு எடுக்க வேண்டும்.

விவரஙளை தொலைப்பேசியில் தெரிவிக்க ஊழியரை நியமிக்க வேண்டும். யாரேனும் புகார் செய்தாலும் அதைப் பதிவு செய்ய வேண்டும்.  இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும்.  

கல்வி நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் கடிதங்களில் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

யாராவது போன் செய்தால் அவர்கள் கேட்கும் முழு விவரங்களைப் பணிவுடன் தெரிவிக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியான 10 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களில் தொலைப்பேசி எண்ணுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.