திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இருமுடிகெட்டு நிறைத்து கொண்டு சன்னிதானம் சென்று 18 ஆம் படி வழியாக ஏறி வந்து ஸ்வாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
பங்குனி மாத பூஜை மற்றும் ஆறாட்டு விழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ம் தேதி திறக்கப்பட்டது. 19-ம் தேதி பங்குனி ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா கோலாகலமாக நடந்தது. நிறைவாக 28-ம் தேதி ஆறாட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
நேற்று வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாமி தரிசனம் செய்தார்.