ஜம்மு:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும் மறைமுகமாகப் பல லட்சம் பேரும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கடும் இழப்பைச் சந்தித்த ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டது.

மார்ச் வரையிலான 3 மாதங்களில் அங்கு ஓட்டல்கள் முழுமையாக புக்கிங் ஆன நிலையில், கொரோனா 2ஆம் அலை காரணமாக ஏப்ரல் முதல் சுற்றுலா தொழில்துறை கடும் பாதிப்பைக் கண்டுள்ளதுடன், 1500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக துறை மதிப்பீட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பிரபல தால் ஏரியில் 3 மாதத்திற்கு முன்பு படகோட்டிகளுக்கு உட்கார நேரம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது வாரக்கணக்கில் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை 8 சதவீத பங்காற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.