லண்டன்
காஷ்மீர் வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் இடம் பெற மறுத்துள்ளார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5 முதல் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் காஷ்மீர் மாநிலத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
காஷ்மீர் மாநில நிலைமை குறித்து நேரில் கண்டறிய ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றக் குழு தற்போது இந்தியா வந்துள்ளது. இந்தக் குழு இன்று காஷ்மீர் மாநிலத்தை நேரடியாகப் பார்வையிட்டு நிலைமையை அறிய உள்ளதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற லிபரல் கட்சியின் உறுப்பினர் கிரிஸ் மைக்கேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர் அதை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தாம் காஷ்மீர் மக்களுடன் காவல்துறையினர் மற்றும் ஊடகவியலர்கள் இல்லாமல் தனியாகப் பேச விரும்பியதாகவும் அதை அரசு ஒப்புக் கொள்ளாததால் நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.