ர்நாடக மாநிலத்தில் சொற்ப எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி,  காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கிறார்.

அவரது ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் பா.ஜ.க. மேற்கொண்ட முயற்சிகள் வீணானது.

மக்களவை தேர்தலில் தொகுதிகள் உடன்பாடு காண்பது தொடர்பாக  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இடையே  நடைபெறும் பேச்சு வார்த்தை- பலன் அளிக்காத நிலையில் , ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கிறது- ஜனதா தளம்.

‘’12 இடங்களை தராவிட்டால் தனித்து போட்டியிடுவோம்’’ என்று அதிரடியாக அறிவித்துள்ளார் ரேவண்ணா.

இவர் –மதச்சார்பற்ற  ஜனதா தளத்தின் பிதாமகன் தேவகவுடாவின் மகன். மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

12 தொகுதிகள் வேண்டும் என்று ஜனதாதளம் அடம் பிடித்தாலும்- பிரச்சினைக்கு முக்கிய காரணம்-ஹசன் மக்களவை தொகுதி.

அந்த தொகுதியில் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் என்பவரை சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளராக அறிவித்து விட்டார்- தாத்தா தேவகவுடா.

ஆனால் அந்த தொகுதியை விட்டுத்தர காங்கிரஸ் மறுத்து விட்டது. தந்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகிறது ஜனதா தளம்.

இதனால் கூட்டணிக்கும், கூடவே ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

–பாப்பாங்குளம் பாரதி