சென்னை

த்திய மாநில அரசுகள் மணிப்பூர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார்.

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தடுக்க தவறிய பாஜக அரசைக்  கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் துணை பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில்,

“மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு, கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். எத்தனையே பேர் காயமடைந்து மருத்துவ வசதி கூட கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கும் சுழலில் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.

மேலும், உள்துறை அமைச்சர் அங்குச் சென்று ஆய்வுசெய்த பின்னரும் கூட அங்கு அமைதி திரும்பவில்லை கலவரம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இது மிகப்பெரிய தலைகுனிவு. பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார்.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி என்ன செய்து கொண்டு இருக்கிறார்”

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.