புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இந்தி நடிகர் சஞ்சய் தத், சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து வருகிறார்.

‘கே.ஜி.எஃப். -2’ படத்தில் வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத், ஐதராபாத்தில் நடைபெறும் இந்த படத்தின் ஷுட்டிங்கில் தற்போது கலந்து கொண்டிருக்கிறார்.

ஐதராபாத்தில் சஞ்சய் தத் தங்கி உள்ள ஓட்டலில் தான் நடிகை கங்கனா ரணாவத்தும் தங்கியுள்ளார். அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படப்பிடிப்புக்காக ஐதராபாத் வந்துள்ளார்.

சஞ்சய் தத்தை ஓட்டல் அறையில் சந்தித்து, பேசிய கங்கனா, தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளார்.

“சஞ்சய் சார். முன் எப்போதும் இல்லாத வகையில் அழகாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்” என அதில் கங்கனா தெரிவித்துள்ளார்.

சஞ்சய் தத்தை கங்கனா சந்தித்தது அவரது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏன்?

இந்தி சினிமா உலகில் நடக்கும் விருந்துகளில் போதைப்பொருள் கலாச்சாரம் இருப்பதாக கங்கனா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் சஞ்சய் தத், போதை மருந்து அருந்திய குற்றச்சாட்டில் சிக்கியவர்.

இதனால் கங்கனாவை அவரது, ரசிகர்கள் வலைத்தளங்களில் வறுத்தெடுத்துள்ளனர்.

– பா. பாரதி