வெலிங்டன்: மூத்த வீரர்கள் பலபேர் இல்லாத நிலையிலும், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய செயலானது உண்மையிலேயே அற்புதமானது என்று புகழ்ந்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதிபெற்றுள்ள நிலையில், கேன் வில்லியம்சன் பேசியுள்ளதாவது, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்றதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைக் கொண்டுவந்தது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், இளம் வீரர்கள் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் வென்றுள்ளது உண்மையில் அற்புதமானது.

ஆஸ்திரேலியாவில் எப்போது சென்று விளையாடினாலும் கடினமாகத்தான் இருக்கும். சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால், இந்திய அணி அங்கு சென்று விளையாடிய விதம், குறிப்பாக இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தியதும், வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தகுந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபின், அந்தச் சவாலை இந்திய அணியினர் எதிர்கொண்டார்கள் என நான் நினைக்கிறேன். இந்திய- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பாகவும், இந்திய அணியின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் இருந்தது. ரசிகர்களும் இந்தத் தொடரை அதிகமாக ரசித்தார்கள்.

ஐபிஎல் தொடருக்குப் பின், இந்திய அணியினர் ஆஸ்திரேலியா சென்று நீண்ட தொடரில் விளையாடியுள்ளனர். அவர்கள் குடும்பத்தினருடன் நேரத்தைக் கண்டிப்பாகச் செலவிட்டு மகிழ வேண்டும்” என்றுள்ளார் வில்லியம்சன்.