காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அத்திவரதர் உற்சவம் இன்று 17வது நாளை எட்டியுள்ளது. தினசரி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். அத்திவரதர் தரிசனத்தின் போது, அர்ச்சகர்கள் அடாவடியாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். அதுபோல, பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு சிறப்புப்பூஜை செய்வ தாகவும், மற்றவர்கள் சாமியை சரியான முறையில் தரிசிக்கக்கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் நேற்று அத்திவரதரை தரிசிக்க வந்த ரவுடி வரிச்சூர் செல்வத்தை சாமி முன்பு அமர வைத்து சிறப்பு பூஜை செய்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை உற்சவத்தின்போது, அர்ச்சர்களின் அடாவடியை தட்டிக்கட்ட காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்ததால், அர்ச்சகர்களை உள்ளே விட காவல்துறையினர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  கோவிலில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும் ஒன்றினைந்து, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அத்திவரதர் தரிசனத்தை புறக்கணிப்புச் செய்து  தகராறு செய்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.