நகரி:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து மருத்துவ மனையில் உள்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.1asamy
காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு ஆந்திராவிலுள்ள விஜயவாடாவிலும் மடம் உள்ளது. ஜெயேந்திரர்  அங்கு உள்ள சந்திரமவுலீஸ்வர வெங்கடேச சுவாமி கோவிலில் சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கடந்த மாதம்  அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத்தொடர்ந்து நினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணம் அடைந்து மடத்திற்கு திரும்பினார்.
நேற்று ஜெயேந்திரருக்கு திடீரென  மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள ஆந்திரா ஹார்ட் அன்ட் பிரையன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயேந்திரருக்கு நுரையீரலில் சளி தேங்கியதால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு டாக்டர் ரவீந்திரநாத் தலைமையிலான டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும்,  சென்னையில் உள்ள ஜெயேந்திரரின் பிரத்தியேக டாக்டர்கள் ஆலோசனையின்பேரில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விஜயவாடா டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.