சென்னை:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆணி திருமஞ்சனூர் விழாவையொட்டி கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் தீட்சதர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்வதால், தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படும்? கனகசபை தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், மூன்றாவது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? என்று மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் கனகசபையில் தரிசிக்க அனுமதியளித்த அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு அக்டோபர் 11க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.