சென்னை: காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு  வீடு திரும்பினார்.

கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகாக ஐதராபாத் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில், கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உள்நோயாளியாக இருக்கும்படி அறிவுறுத்தியதுடன், அவருக்கு முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அறிவிறுத்தினர்.

இதன் காரணமாக, கடந்த 23ஆம் தேதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டதுடன் தொடர் சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதற்கிடையில்,  நேற்று பிற்பகல் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம்வெளியிட்ட செய்திக்குறிப்பில், “லேசான காய்ச்சல், இருமல், சளித் தொந்தரவு காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இன்று அல்லது ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காய்ச்சலில் இருந்து குணமடைந்த கமல்ஹாசன், இன்று காலை வீடு திரும்பியுள்ளார். மேலும் வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.