சென்னை:
பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

விருப்ப மனுக்களை அளிக்க விரும்பவர்கள், நூறு ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மார்ச் 5 ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ.5,000, தனித்தொகுதிகளுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களும், மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ. 2,500 கட்சி நன்கொடையாக வரைவோலை மூலம் (Demand Draft) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்பமனுவுடன் சேர்த்து இணைத்து நன்கொடை தொகையை TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விருப்ப மனு அளிக்கும்; அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card), ஆதார் அட்டை (Aadhar Card) மற்றும் பேன் கார்டு (Pan Card) நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.