சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதி மன்ற நிதிபதிகள் அமர்வு உத்ததரவிட்டு உள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் பேரறிவாளன். கடந்த ஆண்டு, அவரது தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி ஒரு மாதம் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார். மீண்டும் சிறைக்கு சென்றவர், மறுபடியும் உடல்நலப் பாதிப்பு காரணமாக  பரோல் கேட்டு மனு அளித்தார்.  அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், வயதான பெற்றோர்களை காணும் வகையில் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார், அற்புதம்மாள் சிறைத்துறைக்கு மனு கொடுத்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  வழக்கின் கடந்த விசாரணைகளின்போது,  பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. அப்போது அற்புதம்மாள் தரப்பில்  வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களை கவனித்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான்” என்பதை  சுட்டிக்காட்டினார்.