சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழகஅரசு  நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு, மத்தியஅரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வுகளால், மாநில மொழிகளில் படிக்கும் மாணாக்கர்களும், மாநில கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்களும் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற அவலங்களை தடுக்கும் வகையில், திமுக அரசு,  நீட் தேர்வின் தாக்கம் குறித்து,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையிலான குழுவை அமைத்து கடந்த வாரம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்தகுழுவின்  முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு அமைத்த 9 உறுப்பினர்களும் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்