பாட்னா

ன்று நடந்த எதிர்க்கட்சி கூட்ட முடிவில் தலைவர்கள் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர்

சுமார் 4 மணி நேரம் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் தலைவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அந்த விவரம் வருமாறு :

நிதிஷ்குமார் : கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது.பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு பெற்றது. இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம். 17 கட்சிகள் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்போம் என முடிவெடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சித்தலைவர்கள் ஒருமனதாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம். சிம்லாவில் விரைவில் 2-வது கூட்டம் நடைபெறும். பாஜகவை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம். அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : சிம்லாவில் நடக்கும் 2-வது கூடடத்தில் பாஜகவை வீழ்த்துவது குறித்து விரிவாக விவாதிப்போம். அமலாக்கத்துறை, சிபிஐ முகமைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. பாஜக வரலாற்றை மாற்ற முனைகிறது, நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம்.எந்த விவகாரத்திலும் மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து ஆலோசிப்பதில்லை. நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம், ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும். மத்திய அரசிடம் எல்லாவற்றுக்குமே போராட வேண்டி உள்ளது என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி: நாட்டின் கட்டமைப்பை பாஜகவும், ஆர் எஸ் எஸ்-ம் சிதைக்கிறது. வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியலுக்காக இணைந்துள்ளோம்.

சரத் பவார் : ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குக் கிடைத்தது போல, இந்த ஒருங்கிணைந்த முன்னணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் –

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி :காந்தியைத் தூக்கி எறிந்து விட்டு கோட்சே-ஐ முன்னிலைப் படுத்த முயல்கிறார்கள்.