டெல்லி: நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து  ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில், ஜவஹர்லால் நேரு “அவரது பெயருக்கு மட்டுமல்ல. அவர் செய்த பணிகளுக்காக அறியப்பட்டவர்” என்று தெரிவித்துள்ளார்.

லடாக் செல்லும் வழியில், காஷ்மீர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள  நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர்,  நேரு  அவர் செய்த சிறப்பான பணிகளால்தான் நினைவுகூரப்படுகிறாரே தவிர, வெறும் அவரது பெயரால் அல்ல என்று கூறினார்.

தலைநகர் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் கட்டடத்தில் இயங்கி வரும் நேரு நினைவு அருங்காட்சியகம், பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மியூசியம்,  இந்திய விடுதலைப் போராட்டம் மற்றும் இந்திய வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டது.  இதனை பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என மத்திய அரசு  தற்போது மாற்றி உள்ளது. இந்த புதிய பெயர்,  அது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.