பெங்களூரு

பிரபல கர்நாடக தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 

நேற்று கர்நாடகாவின் பிரபல சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினருமான ஜி.ஜனார்த்தன ரெட்டி தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்து அவரது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்தார். இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் பா.ஜ.க. தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

ஜனார்த்தன ரெட்டி,செய்தியாளர்களிடம்

” எனது கட்சியை பா.ஜ.க.வுடன் இணைத்து நானும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதற்காக மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கட்சியில் இணைந்தேன். எந்த பதவியும் எனக்குத் தேவையில்லை”

என்று தெரிவித்துள்ளார்..

பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து விலகினார். கடந்த 2022 -ம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியை தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில், கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.