சேலம்:

சேலத்தில் ரயில் கூரை மீது ஏறி போராடிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த வகையில் சேலம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது போராட்ட ஆர்வத்தில் ரயிலின் கூரை மீது ஏறி மாணவர்கள் சிலர் ஓடினர்.

அப்போது லோகேஷ் குமார் என்ற மாணவர் மீது உயர் அழுத்த மின் கம்பி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து அந்த மாணவர் தூக்கி வீசப்பட்டார்.
உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த மாணவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

65 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் போராட்டக்காரர்கள் மத்தியல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.