சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரை முடிந்தவுடனன் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். இதன் பின் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் பிப்ரவரி 1ம் தேதி வரை கூட்டத் தொடர் நடத்தப்படும். ஜல்லிக்கட்டு அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல் இன்று மாலை 5 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கியது. ஜல்லிக்கட்டுக்காக மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு இந்த சிறப்பு கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல்வர் பன்னீர்செல்வம் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதன் மீது உரையாற்றினார். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசாமி உள்ளிட்ட பிற தலைவர்களும் மசோதா மீது உரையாற்றினர். இதன்பிறகு ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜசேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்