சென்னை

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  இதனால் பாதிப்பு குறையவே அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.   இதையொட்டி கொரோனா பாதிப்பு அடிப்படையில் மூன்று பிரிவாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன

இந்த ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுகாதாரத்துறை அதிகாரிகள், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், தொழில்துறை முதன்மை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்கள் போன்று கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தைக் குறைந்த அளவில் அனுமதிப்பது, மேலும் ஜவுளி, நகை கடைகள் திறப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இன்னும் ஒரு வாரத்துக்கு தமிழகம் முழுவதும் ஒரே அளவு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாம் என இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அல்லது நாளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.