ண்டிகர்

ற்போது கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இயலாது எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

ஊதிய சட்ட விதிகள் 2019 கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் சட்டமாகி உள்ளது.   இதன் மூலம் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.   இதுவரை இந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவில்லை.   இந்த சட்டத்தின் கீழ் 13 வகையான பணிகள் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளன.   அதாவது மொத்தமுள்ள தொழிலாளர்களில்  40% மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் உள்ளனர்.

இந்த குறைந்த பட்ச ஊதியத்தில் அளிக்கப்படும் அகவிலைப்படியில் 4% உயர்த்தி பஞ்சாப் அரசு உத்தரவிட்டது.    இந்த உத்தரவு இந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.  இந்த உயர்வின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாதாரண தொழிலாளிக்குக் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.8776 லிருந்து ரூ. 9178 ஆகக் கடந்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த குறைந்த பட்ச ஊதியத்தில் அளிக்கப்பட்ட உயர்வை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  கடந்த 9 ஆம் தேதியிட்ட அரசாணையில், “தற்போது கொரோனா தொற்று காரணமாகப் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இது சரியான நேரமில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.  எனவே மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் தொழில்கள் நசிந்துள்ள வேளையில் தொழிலதிபர்களால் தங்கள் தொழில்களைத் தொடர முடியாத நிலையில் இவ்வாறு அறிவித்துள்ள முதல் மாநில அரசு பஞ்சாப் அரசாகும்.  பல தொழிலகங்கள் இந்த ஊதிய உயர்வு காரணமாக பொருளாதார நெருக்கடி உண்டாகி மூடப்படும் நிலையில் இது நல்ல அறிவிப்பு என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் இதே முடிவை கர்நாடக அரசும் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.