டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம்   என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மூலம், 1.5 பில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து சரண் அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பல நாட்கள் இழுபறிக்குப் பிறகு மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைத் தாக்கினார். மேலும், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்ட ஒரு “மொத்த சரணடைதல்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ததன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை விற்றுவிட்டது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அமெரிக்கா, பிரதமர் மோடியை நெருக்குகிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை பார்க்கிறோம். நம் மக்கள், தரவுகள், உற்பத்தி செய்யும் திறன், எரிசக்தியை நாம் பாதுகாக்க வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஒரு கடுமையான தாக்குதலில், இந்தியா கூட்டணி அரசாங்கம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், அது டொனால்ட் டிரம்பிடம் இந்தியாவை சமமாக நடத்த வேண்டும் என்று கூறியிருக்கும் என்று காந்தி மேலும் கூறினார்.

முன்னதாக, ,இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 0% ஆக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கு பதிலாக, இந்தியப் பொருட்களுக்கான வரியை 18% ஆக குறைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்தியாவின் தரவு மையங்களை பயன்படுத்தி ‘கிளவுட் சேவை’களை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக சாடியுள்ள நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, எரிசக்தி துறையில் இந்தியாவின் பாதுகாப்பு பறிபோய்விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ”இந்த விவாதத்தில் என்னைப் பேச அனுமதித்ததற்கு நன்றி. உலகமே போரின் சகாப்தத்திற்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு இந்த போராட்டத்தின் மையமாக இருக்கப்போகிறது. வரும் காலங்களில் ஏஐ-இன் விளைவுகள் அதிபயங்கரமாக இருக்கும் என இந்த அரசுக்கு எச்சரிக்கிறேன். நம் நாட்டிற்கு 1.4 பில்லியன் மக்கள் தான் பலம். இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருடைய பலத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்த கிரகத்தின் மிகப்பெரிய தரவு தளமாக இந்தியா உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்திற்கு எரிபொருளாக தரவுகள் இருக்கின்றன.

இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகளை இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பாஜக அரசு பாரத மாதாவை விற்றுவிட்டது. எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. விவசாயிகளின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுவிட்டது.

அமெரிக்கா வல்லரசாக இருக்கவும், டாலர் மதிப்பை பாதுகாக்கவும் விரும்பினால் அதற்கான திறவுகோல் இந்திய தரவுகள்தான். அமெரிக்கா வங்கதேசத்தின் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு 18 சதவீதமாக்கியுள்ளது. இதனால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நமது விவசாயிகள் ஒரு புயலை எதிர்கொள்கிறார்கள். நமது ஜவுளித் தொழிலும் போய்விட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கர்கள் எங்கள் நிதி மற்றும் ஆற்றலை ஆயுதமாக்க அனுமதித்துள்ளீர்கள்.

எங்கள் தாயை நீங்கள் விற்றுவிட்டீர்கள், உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள எப்ஸ்டீன் கோப்புகள் குறித்த வழக்கு பிரதமர் மோடியை இலக்காகக் கொண்டது” என தெரிவித்தார்.

ராகுல் காந்தி எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து தொடர்ந்து பேச அவையில் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது ராகுல் காந்தி, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மூலம், 1.5 பில்லியன் இந்தியர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து சரண் அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

[youtube-feed feed=1]