தூத்துக்குடி

ருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்துச் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரித்துறைக்கு அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்குக் காட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அவர்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது

கண்காணிப்பதோடு மட்டுமின்றி  முறையாக கணக்குக்காட்டவில்லை எனில் அவற்றைச் சோதனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இந்த அடிப்படையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிரடி சோதனையை வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சோதனை  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதாவது தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இங்கு 5 வாகனங்களில் வந்த 16 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காலை 10.30 மணியளவில் தொடங்கித் தொடர்ந்துநடைபெற்று வருகிறது.

உயர் அதிகாரிகள் தலைமையில் நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாகக் கணக்குக் காட்டாத காரணத்தினால் சோதனை நடைபெறுகிறது. வங்கி கடந்த 4 ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்குத் தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாட்டுடன் கணக்கு காட்டியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கி அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்குப்  பிறகு அனுமதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.