11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட அல்லது பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறுவதையே முன்னுரிமையாக கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையை போலி சேர்க்கை நடைமுறை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படை தகுதி மதிப்பெண் மட்டுமே பெற்று 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற பள்ளிகளில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இதனால் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய பல்கலைக்கழகங்கள் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வருகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களில் ஒன்றாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை நிர்வகிக்க ஜனநாயக பொறுப்புடன் தங்கள் கடமையை ஆற்றவேண்டும்” என்று கூறினார்.

மேலும், “ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் அரசியலமைப்பு கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும்” என்றும் பேசினார்.

“11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளும் பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறுவதையே முன்னுரிமையாக கொண்டிருக்கிறார்கள். தவிர, சில பள்ளிகளும் கல்லூரிகளும் இதை ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படுகின்றன.

இதனால் கல்வியின் உண்மையான இலக்கு அடையப்பட்டதா என்பது கேள்விக்குறியாக நம் முன் இப்போது எழுந்துள்ளது ?

தரவரிசைகள், சேர்க்கைகள் மற்றும் நேர்காணல்களை மையமாகக் கொண்ட இத்தகைய கல்வி முறை, கல்வியின் உண்மையான நோக்கங்களை இழந்துவிட்டதா என்று ஆச்சரியப்படுமளவுக்கு உள்ளது” என்று வேதனையுடன் கூறினார்.

‘கல்வி உரிமைச் சட்டம்’ 14 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வி எந்த நிலையில் உள்ளது…