திருப்பதி,

2024ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தற்போது உலகநாடுகளை பின்தள்ளி வெகுவேகமாக முன்னேறி வருகிறது. இந்த மாதம் 103 செயற்கை கோள்களை விண்ணுக்கு செலுத்த இருக்கிறது. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களையும் வர்த்தக ரீதியாக பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம்  ஏவி வருகிறது.

இந்நிலையில் இன்னும் 8 ஆண்டுகளில் ராக்கெட்டுகள் மூலம்  மனிதனை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2024ம் ஆண்டு இந்திய ராக்கெட்டில் மனிதனை அனுப்ப இருப்பதாக ஆந்திரா வில் நடைபெற்று வரும் இந்திய அறிவியில் மாநாட்டில் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நேற்று முன்தினம் இந்திய விண்வெளி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்றைய மாநாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் பற்றி விவாதம் நடைபெற்றது.

இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் எல்.பி.எஸ்.சி. என்ற திரவ புரபல்சன் அமைப்புகள் மையத்தின் இயக்குனர் சோம்நாத் பேசினார்.

அப்போது,  வரும் 2024-ம் ஆண்டு, செமி கிரையோனிக் என்ஜினை கொண்டு இயங்கும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் சோதனை ரீதியில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

தற்போது செயல்படுத்தி வரும் ஆரம்ப கட்ட விண்கலங்கள், சோதனை ரீதியிலானவை. அவை ஆட்களை சுமந்து செல்லாது. மேல்நிலையில், 10 டன் எடையுள்ள விண்கலத்தை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் வீச முடியும்.

இருப்பினும், இஸ்ரோ உடனடியாக மேற்கொள்ளக்கூடிய திட்டம், பி.எஸ்.எல்.வி., சி 37 ராக்கெட்டு மூலம் விண்வெளியில் 103 செயற்கை கோள்களை செலுத்துவதுதான் என்றார்.

மேலும் இந்த மாதம் செலுத்த இருக்கும் செயற்கைகோள் குறித்து அவர் கூறியதாவது,

“வெளிநாடுகளின் 100 குறும் செயற்கைகோள்களுடன், கார்ட்டோசாட் 2-டி, ஐ.என்.எஸ். 1 ஏ மற்றும் ஐ.என்.எஸ். 1பி செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி., சி 37 ராக்கெட் சுமந்து செல்லும்.

இவற்றின் மொத்த  எடை 1382 கிலோ ஆகும். பி.எஸ்.எல்.வி.யைப் பொறுத்தமட்டில் நடப்பு நிதி ஆண்டில் 8 ஏவுதலுக்கு திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது. படிப்படியாக பல கட்டங்களில் இந்த எண்ணிக்கையை 20 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம்” என குறிப்பிட்டார்.