திருவனந்தபுரம்

இஸ்ரோ தலைவர் சோம்நத் தனது சுயசரிதை குறித்து சர்ச்சை எழுந்ததால் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய ‘நிலவு குடிச்ச சிம்மங்கள் (நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்) என்ற தன்வரலாற்று நூலை(சுயசரிதை) வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.  அந்த புத்தகத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவனுக்கு எதிரான சில கருத்துகள் இடம் பெற்றிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இஸ்ரோ தலைவர் பதவி உட்படப் பல முக்கியமான பொறுப்புகள் தனக்குக் கிடைப்பதைத் தடுக்க, அப்போதைய இஸ்ரோ தலைவராக இருந்த சிவன் முயன்றதாக சோம்நாத் குறிப்பிட்டு இருந்ததாகச் சொல்லப்பட்டது.  மேலும் சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட சில குறைபாடுகள் குறித்தும் சோம்நாத் விமர்சித்து எழுதியிருந்ததாகத் தகவல் வெளியானது.

நேற்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் இந்த புத்தகம் சர்ச்சையையும் விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியது. எனவே தனது சுயசரிதை புத்தகத்தைத் திரும்பப் பெறுவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சோம்நாத் குறித்து, “இந்த புத்தகத்தின் நோக்கம் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது கிடையாது, ஆகவே இந்த புத்தக வெளியீட்டினை ரத்து செய்து, புத்தகத்தைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.