கோவை:
கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அங்குள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றிற்கு கட்டட முன் அனுமதியும், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அங்குள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றிற்கு கட்டட முன் அனுமதியும், தடையில்லா சான்றிதழும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லையென்றால் உடனடியாக ஈஷா யோகா மையம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை ஈஷா யோகா மையம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து, அனுமதி பெற்றிருக்காவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.