மும்பை: பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக எடுக்க நடிகர் ஷாருக்கான்  திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருகாலத்தில் பிரதமர் மோடியின் வெற்றிக்காக உழைத்த அரசியல் சாணக்கியன் பிரசாந்த் கிஷோர், சமீப காலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஐ-பேக் நிறுவனம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் மூலம் களஆய்வு செய்து, அரசியல் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்கிறார்.  சமீப ஆண்டுகளாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக, மாநில கட்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவதுடன், அவர்களின் வெற்றியையும் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பெற்ற மாபெறும் வெற்றியே சாட்சி.

இந்த நிலையில் பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கையை வெப்சிரீஸ்  எடுக்க பிரபல பாலிவுட் நடிகர்  ஷாருக்கான் விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஷாருக்கானும், பிரசாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் உடனிருந்ததும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஷாருக்கின்,  ‘ரெட் சில்லிஸ்’ தயாரிப்பு நிறுவனம், பிரசாந்த் கிஷோர் வாழ்க்கைய வெப்சிரீஸ் ஆக எடுக்கவே விரும்புவதாகவும், ஆனால், பிரசாந்த் கிஷோர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த வேப்சிரீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.