விருதுநகர்:

தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை  நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

ல்லூரி மாணவிகளை  தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி, மனம் பாதிக்கப்பட்டு, நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சுமார் 330 நாட்கள்  சிறையில் இருந்து கடந்த மாதம்  ஜாமினில் வெளிவந்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதி மன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். தற்போது, இளம்பெண் போன்ற தோற்றத்துடன், சுடிதார், கண்ணாடி என அசத்தலாக வந்து விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீதி மன்ற வளாகத்தில் கன்மூடி தியானம் செய்வது போன்று அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது வழக்கறிஞர் சங்கபாண்டியை, பாவா (கணவர்) வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்றும், தனக்கு  சாமி வந்துள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதையடுத்து, அவரை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அருகில் உள்ள தர்காவுக்கு சென்று அமர்ந்துகொண்டு பிரச்சினை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நிர்மலாதேவி,  மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சங்கரபாண்டியன் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக நிர்மலாதேவியை நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் ஒரு வாரம் அங்கு தங்கி அவர் சிகிச்சை பெறுவார் என்றும் தெரிவித்து உள்ளார்.

நிர்மலாதேவிக்கு உண்மையிலேயே மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதா அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல நாடகம் நடத்தப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.