கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாக, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, தனது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டு உறவினர்களை ஐஎன்எஸ் – விராத் போர்க் கப்பலில் ஏற்றி, நாட்டின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் பிரதமர் மோடி மீது, வேறு ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

மோடியின் நேரடி பார்வையின் கீழ், கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி, விசாகப்பட்டிணத்தில் நடந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில், கனடா குடியுரிமைப் பெற்ற அக்ஷய் குமாரை, ஐஎன்எஸ் சுமித்ரா போர்க் கப்பலில் ஏற்றியது எந்த வகை தேசப் பாதுகாப்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 30 ஆண்களுக்கு முன்பு நடந்ததாக, ஆதாரமில்லாமல் கூறப்படும் சம்பவத்தை தற்போது கிளறி எடுத்துப் பேசும் மோடி, எந்த அடிப்படையில், வெளிநாட்டு குடியுரிமைப் பெற்ற அக்ஷய் குமாரை அனுமதித்தார் என்ற விமர்சனம் பதிலளிக்கப்படாமல் உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டே, அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையை, எந்தவித சிரமமுன்றி மிக எளிதாகப் பெற்றது குறித்த தகவல் மீடியாவில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவின் போர்க்கப்பலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.

பிரதமர் பதவியேற்றதிலிருந்து மீடியாக்களைப் புறக்கணித்து வந்த மோடி, சமீபத்தில், தன்னை விரிவாக பேட்டியெடுக்க அனுமதித்த நபரும் இந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற அக்ஷய் குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.