டெல்லி :

2019 ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் போட்டி தொடரில் 34வது லீக் போட்டி, நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

போட்டியில்  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால் டெல்லிஅணி பந்துவீச்சுக்கு தயாரானது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். ரோகித் 30 ரன்னிலும், டி காக் 35 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து பென் கட்டிங் 2 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் பண்டியா சகோதரர்கள் ஹர்திக் – க்ருனால் ஜோடி சேர்ந்தனர். 17 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 118 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தது. தொடர்ந்தது பாண்டியாஸ் அடித்த அதிரடி ஆட்டத்தின் முடிவையே மாற்றியது.  அடுத்த மூன்று ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தனர் பண்டியா சகோதரர்கள். மும்பை அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. இந்த மூன்று ஓவர்கள் தான் போட்டியை மாற்றியது.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்களை எடுத்தது. குருணாள் பாண்டியா 37 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

டெல்லியின்  ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அப்படி இருந்தும் டெல்லி அணி மண்ணை கவ்வியது, கேப்டனின் குளறுபடி என்று கூறப்பபடுகிறது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சாளர் களை பயன்படுத்துவதில்  கவனம் செலுத்த தவறி விட்டார்  என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

சிறப்பாக பந்து வீசிய அமித் மிஸ்ராவிற்கு மூன்று ஓவர்கள் மட்டுமே கொடுத்தார். அதுபோல   குறைந்த ரன்களே கொடுத்திருந்த இஷாந்த் சர்மாவிற்கும் மூன்று ஓவர்கள் மட்டுமே கொடுத்தார்.. இது தவறானது என்றும், ரன்களை வாரி இறைத்திருந்த கிறிஸ் மோரிஸ், கீமோ பாலுக்கு கடைசி நேரத்தில் ஓவர் கொடுத்ததே டெல்லி தோல்விக்கு வழி வகுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி  தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (35 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிரித்வி ஷா (20 ரன்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை கொடுத்த நிலையில், தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பினர்.  அடுத்து வந்த காலின் முன்ரோ (3), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (3 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (7 ரன்), கிறிஸ் மோரிஸ் (11 ரன்) போன்றோர்  மும்பை பவுலர்களின் பந்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல்  வெளியேறினர்.

இதனால்,  20 ஓவர்கள் முடிவில்  டெல்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த ஐபிஎல் தொடரில்   மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. . டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.

அதுபோல, இந்த ஆட்டத்தில் மிஸ்ரா தனது 150 விக்கெட்டை எடுத்து சாதனை படைத்தார்.

அமித் மிஸ்ரா 150-வது விக்கெட்

மும்பை அணி களத்தில் மட்டையுடன் இருந்தபோது ‘பவர்-பிளே’ முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மா (30 ரன், 22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியின் ஸ்கோர் 57 ரன்களாக இருந்த போது வெளியேறினார்.

அமித் மிஸ்ராவின் சுழற்பந்தில் அவர் கிளின் போல்டு ஆகி வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம் அமித் மிஸ்ரா 150 வது விக்கெட்டை வீழ்த்திய சாதனையை படைத்துள்ளார்.  இ150விக்கெட்டுகள் வீழ்த்த அமித் மிஸ்ரா 140 போட்டிகளில் பந்து வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 150 விக்கெட்டுகளை தாண்டி இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஐ.பி.எல். வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். அவரை தொடர்ந்து தற்போது அமித் மிஸ்ரா அந்த சானையை எட்டியுள்ளார்.

அதுபோல மும்பை அணி கேப்டன்  ரோஹித் சர்மா டெல்லி அணிக்கு எதிராக 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்க்ஸில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்தார் ரோஹித்.

இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்தியர் ரோஹித் சர்மா ஆவார்.