டெல்லி

ந்திய கிரிக்கெட் வாரியம் ஐ பி எல் போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்து புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது,

அண்மையில் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே வான்வெளி தாக்குதல் தீவிரமடைந்து போர் பதற்றம் அதிகரித்ததால் இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.

தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என நேற்றிரவு அறிவித்து புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.

17 ஆ ம் தேதி அன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன.  புதிய அட்டவணைப்படி 13 லீக் ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 4 பிளே-ஆப் சுற்று என மொத்தம் 17 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

பாதியில் ரத்தான பஞ்சாப்- டெல்லி இடையிலான லீக் ஆட்டமும் மறுபடியும் நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய 6 இடங்களில் நடைபெறுகிறது.

புதிய அட்டவணைப்படி இரண்டு நாளில் இரு ஆட்டங்கள் இடம் பெறுகிறது. சென்னையில் நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரும் மே 29-ந்தேதி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றும், மே 30-ந்தேதி வெளியேற்றுதல் சுற்றும், ஜூன் 1-ந்தேதி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றும், ஜூன் 3-ந்தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. முந்தைய அட்டவணையுடன் ஒப்பிடும்போது 9 நாட்கள் ஆட்டம் கூடுதலாக நகர்கிறது. பிளே-ஆப் ஆட்டத்திற்குரிய இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா கூறியுள்ளார்.