துபாய்,
நெதர்லாந்து நாடு ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான அமைதி பரிசு இந்திய மாணவிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  இறுதி பட்டியலில் இந்திய மாணவி இடம்பெற்றுள்ளார்.
துபாயில் உள்ள தேரா சர்வதேச பள்ளிக்கூடத்தில் படித்து வரும் இந்திய மாணவி கேகசன் பாசு (வயது 16). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கேகசன் பாசு
கேகசன் பாசு

இவரது ‘கிரீன் கோப்’ அமைப்பில் 1,000 பேர் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகின்றனர். கல்வியை சிறப்பான முறையில் படித்து வருவதற்காக இந்திய அரசின் விருதுகளையும், இசை, நடனம், பேச்சுப்போட்டி ஆகியவற்றில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதி பட்டியலில் மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார்.
இந்த பரிசு பெறுபவர் பெயர் அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந் தேதி நெதர்லாந்து நாட்டில் அறிவிக்கப்படும்.  இந்த அமைதி பரிசை, நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் வழங்க இருக்கிறார்.
இந்த பரிசுக்கான  சான்றிதழுடன், ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்து 20 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும்.
ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு தாலிபான்களால் சுடப்பட்டு, உயிருக்கு போராடி உயிர் பிழைத்த பாகிஸ்தான் மாணவியான மலாலாவுக்கு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.