கொல்கத்தா:

ல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவி ஒருவர், பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என ஆவேசமாக கோஷமிட்டார். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மாநில ஆளுநர்  ஜெகதீப் தன்கர் வருகை தந்திருந்தார். ஆனால் அவரை விழா மேடைக்கு செல்ல விடாமல் மாணவர்கள் தர்ணா செய்ததைத் தொடர்ந்து, அவர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில்பங்கேற்காமலேயே திரும்பி சென்றார்.

அதைத்தொடர்ந்து கல்லூரி விசி தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  பதக்கம் பெற மேடை ஏறிய மாணவி டேப்ஸ்மிதா சவுத்ரி, குடியுரிமை சட்ட திருத்தத்தையும் என்.ஆர்.சி.யையும் தாம் எதிர்ப்பதாக முழங்கியவர், அதற்காக அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது என்றார்.

அத்துடன் தமது கையில் வைத்திருந்த குடியுரிமை சட்ட திருத்த நகலை விழா மேடையில் கிழித்து எறிந்து விட்து,  இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கினார். இதன் பின்னரே தமக்கான பட்டத்தைப் பெற்றுவிட்டு திரும்பினார்.

இதனால் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர் ஒருவரும் பட்டம் பெற மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்  புதுவை பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்களின் ஒற்றுமைக்கு ஆதரவு தெரிவித்து கேரளா மாணவி ரபீஹா தமக்கு வழங்கப்பட்ட தங்க பதக்கத்தை பெற மறுத்தது குறிப்பிடத்தக்கது.