இந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.

இந் நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். அவர் பெயர் உஸ்மான் படேல்.

இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தவர். குடியுரிமை சட்டம் பற்றி வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே, இப்போது ராஜினாமா முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார். பாஜக இப்போது வெறுப்பு அரசியலை கையில் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில், மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவின் சிறு பான்மை பிரிவைச் சேர்ந்த 100க்கான உறுப்பினர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.