டில்லி

த்திய அரசு வழங்கும் திரப்பட விருதுகளில் இந்திரா காந்தி மற்றும் நர்கீஸ் தத் விருதுகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் ‘தேசிய திரைப்பட விருதுகள்’ வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகின்றன.

தேசிய விருது பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகள், பரிசுத் தொகைகள் ஆகியவற்றை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைப்படி, ’70-வது தேசிய திரைப்பட விருதுகள் 2022′-ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் வழங்கப்பட்டு வரும் ‘சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது’ என்பது ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரிசுத் தொகை முன்பு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பிரித்து வழங்கப்பட்ட நிலையில், இனி இயக்குநருக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வரும் ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது’ என்பது ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைக் கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த படம், சிறந்த அறிமுகப் படம், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் திரைப்படத்திற்கு வழங்கப்படும் ‘ஸ்வர்ண கமல்’ விருதுக்கான பரிசுத் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் மற்றும் அனைத்து நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் ‘ரஜத் கமல்’ விருதுக்கான பரிசுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

‘சிறந்த அனிமேஷன் படம்’ மற்றும் ‘சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்’ ஆகிய 2 வகையான விருதுகளும், சிறந்த ‘ஏ.வி.ஜி.சி.’ திரைப்படம் (அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) என்ற பிரிவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை மூன்று துணைப்பிரிவுகளைக் கொண்டிருந்த ‘சிறந்த ஒலிப்பதிவு’ பிரிவு, இனி ‘சிறந்த ஒலி வடிவமைப்பு’ என்ற ஒரே பிரிவின் கீழ் அறியப்படும்.  மேலும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த பரிசுத் தொகை ஒலி வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.