டில்லி

வரும் 2024 டிசம்பரில் இந்தியாவில் தயாராகும் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி செமி கண்டக்டர் சிப் நிறுவனம், செமி கண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி குஜராத்தில் 8.25 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொழிற்சாலையை மைக்ரான் நிறுவனம் அமைத்து வருகிறது. இது இந்தியாவில் அமைக்கப்படும் முதலாவது செமி கண்டக்டர் தொழிற்சாலையாகும்.

இது மத்திய அரசு, குஜராத் மாநில அரசுகளின் ஆதரவுடன் மொத்தம் 275 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் அமைகிறது. இந்த முதலீட்டுத் தொகையில் மத்திய அரசு 50 சதவீதத்தையும், மாநில அரசு 20 சதவீதத்தையும், மீதமுள்ள தொகையை மைக்ரான் நிறுவனமும் வழங்குகிறது. தொழிற்சாலை 2024-ம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம்,

”செமி கண்டக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆகவே இந்தியாவில் அதுபோன்ற தொழிற்சாலையை உருவாக்கப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது. குஜராத் மாநிலத்தில் மைக்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஓராண்டுக்குள் 4 முதல் 5 செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் இந்தியாவில் அமைக்கப்படும். வரும் 2024-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவில் தயாராகும் முதலாவது செமி கண்டக்டர் சிப் வெளியாகும். இது மைக்ரான் நிறுவனத்தின் முதலாவது செமி கண்டக்டர் சிப்பாக இருக்கும்”.

எனத் தெரிவித்துள்ளார்.