டில்லி
கடந்த 2011 க்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் அதிக அளவில் நம் நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா உலகின் அதிக கச்சா எண்ணெய் உபயோகிக்கும் நாடுகளில் மூன்றாவதாக உள்ளது. இதில் கடந்த 2011 ஆம் ஆண்டு 2,30,000 டன்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் அதுவே அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகும் அதன் பிறகு அது குறையத் தொடங்கியது.
கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவாகவே காணப்பட்டது. அத்துடன் நிலக்கரி மற்றும் எல் பி ஜி வாயு போன்றவற்றின் இறக்குமதியும் குறைந்தே காணப்பட்டது. இதனால் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி 2011 ஆம் வருடத்தை விட அதிகரித்துள்ளது. அந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.8% அதிகரித்துள்ளது. இது சரித்திரத்தில் ஒரு புதிய உச்சமாகும். அதே நேரத்தில் அந்த மாதம் பெட்ரோல் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.