நியூ ஜெர்சி

ஒரு அமெரிக்க வாழ் இந்திய மாணவன் குடும்பத்தினர் மூவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகி உள்ளது.

அமெரிக்க நாட்டின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த யஷ்குமார் பிரம்மபட்(வயது 38), அவரது பெற்றோர் திலீப்குமார் பிரம்மபட் (வயது 72 ), பிந்து பிரம்மபட் (வயது 72) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் ஓம் பிரம்மபட் (வயது 23) நியூ ஜெர்சி வந்து தங்கிப் படித்து வந்தான்.

கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவர்களின் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் இரண்டாவது மாடியில் திலிப் மற்றும் பிந்து இறந்து கிடப்பதைக் கண்டனர். உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் யஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொ லை தொடர்பாக, அந்த வீட்டிலிருந்த ஓம் பிரம்மபட்டை காவல்துறையினர் விசாரித்தபோது, கைத்துப்பாக்கி மூலம் அவர்களைச் சுட்டதாகவும் அந்த துப்பாக்கியை இணையத்தில் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார். அவரை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது, கொலை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்பதால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.