கோவிட்-19 மற்றும் பிற வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணம் செய்யும் போது பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பம், மாசுபாடு மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் பல்வேறு மண்டல ரயில்வே பிரிவுகள், பயணிகள் தங்கள் பயணங்களின் போது முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும், கைகளைக் கழுவ வேண்டும் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
“ரயில் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? ரயிலில் பயணம் செய்யும் போது, கடுமையான தொற்று அபாயத்தைக் குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று வடக்கு ரயில்வேயின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல், @RailMinIndia, @IRCTCofficial, @WesternRly, @Central_Railway மற்றும் @EasternRailway ஆகிய எக்ஸ் ஹேண்டில்கள் ரயில் பயணிகள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் செய்திகளைப் பகிர்ந்துள்ளன.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிற தொற்று நோய்களையும் தடுக்கிறது என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.
“முகக்கவசங்களை அணிவது COVID-19 க்கு எதிராக மட்டுமல்லாமல், பிற தொற்று சுவாச நோய்களிலிருந்தும் முக்கியமான பாதுகாப்பை வழங்குகிறது” என்று ரயில்வே அதன் சமீபத்திய ஆலோசனைகளில் ஒன்றில் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]