புதுடெல்லி: இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் தெற்காசியாவிலேயே அதிகம் என்றும், அதேசமயம், வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளில் இந்தப் பரிசோதனை இலவசமாக கிடைக்கிறது என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கு மொத்தமாக ரூ.4500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்கிரீனிங் சோதனைக்கு ரூ.1500 என்றும், கூடுதலான உறுதிப்படுத்தல் சோதனைக்கு ரூ.3000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தப் பரிசோதனைகளுக்காக, தனியார் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவு என்ன? என்பது தெளிவாக கூறப்படவில்லை. இந்திய அரசின் இத்தகைய முதலாளித்துவ சார்பு போக்கினால், நாட்டில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

வங்கதேசம் போன்ற சிறிய நாடுகளே, கொரோனா சோதனையை இலவசமாக தருகையில், இந்தியா போன்ற பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள், பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் அல்லது தனியார் சார்பாக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய வேண்டுமென்ற குரல் எழுந்துள்ளது.