இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா யோஷிகாவா, மிஸ் ஜப்பான் ஆக வெற்றி பெற்றுள்ளார்.
பிரியங்கா யோஷிகாவா இந்திய தந்தைக்கும் ஜப்பானிய தாய்க்கும் டோக்கியோவில் பிறந்தவர். கலவை இனத்தைச் சேர்ந்தவர் என்ற பாகுபாட்டை சிறு வயதில் இருந்தே அதிகம் சந்தித்தார் பிரியங்கா. “என் நிறத்துக்காக நான் ஒதுக்கப்பட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.    இந்த மிஸ் ஜப்பான் போட்டியிலும் அது போன்ற சூழல் ஏற்பட்டது.
“மிஸ் ஜப்பான் அழகி, முழு ஜப்பானியராக இருக்கவேண்டும்; பாதியாக அல்ல” என்று ஜப்பானிய ஊகங்கள் பல கருத்துக்களை வெளியிட்டன. இதனால் பிரியங்கா மிகவும் மனம் சோர்ந்தார்.
Japan_2999940f_2999983f
ஆனாலும் கடும் போராட்டங்களுக்குப் பிறகு, ஜப்பானிய அழகியாக நேற்று (திங்கள்கிழமை) முடிசூட்டப்பட்டார். அப்போது அவர், “நான் இந்திய – ஜப்பானிய பந்தம் கொண்டவள்தான்.  இந்திய ரத்தம் என்னுள் கலந்திருப்பது குறித்துப் பெருமிதம் கொள்கிறேன்” என்று ஆனந்தக் கண்ணீர் வழிய தெரிவித்தார்.
அவர், அழகிப்பட்டம் பெற்ற பிறகு “பிரியங்கா  பல் இன சமூகத்தைப் பெருமைப்படுத்தி உள்ளார்” என்று பலர் புகழத்தொடங்கியிருக்கிறார்கள்.
இது குறித்துப் பேசிய பிரியங்கா யோஷிகாவா, “நான் இந்திய – ஜப்பானிய கலவை என்றாலும் முழுமையான ஜப்பானிய பெண்தான்” என்றார்.
ஜப்பானின் முதல் கருப்பின அழகியாக அரியானா மியாமோட்டோ என்பவர் முடிசூட்டப்பட்டு சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு இந்திய பாரம்பரியமுள்ள பிரியங்கா மிஸ் ஜப்பானாக முடிசூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.