வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ் கொரியர் (FedEx) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களின் உயர்அதிகாரிகளாக இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கூகுள், மைக்ரோ சாப்ட், டிவிட்டர் உள்பட பல நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இந்தியர்களும், இந்திய வம்சாவழியினரும் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது,  உலகளவில் கொரியர் வர்த்தகத்தில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான  அமெரிக்காவின் ஃபெட்எக்ஸ்  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் சுப்ரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தலைமை நிர்வாகியாக உள்ள  ஃபிரெட்ரிக் ஸ்மித் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது இடத்துக்கு ராஜ் சுப்ரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ராஜ்சுப்பிரமணியத்தின் சொந்த ஊர் கேரள மாநில தலைவர் திருவனந்தபுரம். மும்பை ஐஐடி.,யில் பட்டம் பெற்றவராவார். அமெரிக்காவின் டென்னிஸ்சியில் உள்ள மெம்பிஸ் பகுதியில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்தில் தனது பணியை துவக்கிய இவர், தொடர்ந்து ஹாங்காங் கிளையில் ஆசிய பசிபிக் பிராந்திய மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றி வந்தார். பிறகு கனடாவில் உள்ள பெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவன தலைவராகவும், அமெரிக்க கிளையில் சர்வதேச மார்க்கெட்டிங் பிரிவு மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 27 ஆண்டுகளாக ஃபெட்எக்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தற்போது நிர்வாக துணை தலைவராகவும், மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரியாக இருந்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள ஃபெட்எக்ஸ் நிறுவனத்தில் 5லட்சத்து 70,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது இந்நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 1 ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.