டில்லி:

ற்கனவே நிதிச்சுமை காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தள்ளாடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மேலும் சோதனை மேல் சோதனை  வந்துள்ளது.

இதுவரை விமானத்தை இயக்க எரிபொருள் வழங்கி வந்த இந்தியன் ஆயில் நிறுவனமும், பழைய பாக்கியை செட்டில் செய்ய கூறி, எரிபொருள் வழங்க முடியாது என்று மறுத்து விட்டது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் இயக்கப்படுவதில் மேலும் சிக்கல் அதிகரித்து உள்ளது.

புகழ்பெற்ற விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவ னம் நிதிச்சுமை காரணமாக விமான சேவைகளை வெகுவாக குறைந்து வருகிறது.  தொடக்கத்தில் 119 விமானங்களை கொண்டு தனது சேவையை தொடங்கிய ஜெட் ஏர்வேஸ் தற்போது 16 விமா னங்களை மட்டுமே இயக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக விமான பைலட்கள் மற்றும்  ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் பணம் இல்லாத இல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

தங்களுக்கு சம்பளம் தரப்படாததால், கடந்த 1ந்தேதி முதல்  விமானத்தை இயக்க மாட்டோம் என்று விமானிகள் மற்றும் ஊழியர்கள் அறிவித்திருந்த நிலையில், விமான நிறுவனம் ஊழியர் களிடையே நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து, வேலை நிறுத்தம் 15ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மேலும் சோதனை ஏற்பட்டுள்ளது. இதுவரை  ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் நிரப்புவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இனிமேல் விமான எரிபொருள் தர முடியாது என்று கைவிரித்து விட்டது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட  பெட்ரோலுக்கு செலுத்த வேண்டிய மிகப்பெரிய தொகையை உடனே செலுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.

இதன் காரணமாக தற்போது இயக்கப்பட்டு வரும் 16 விமானங்களின் சேவையும் தடை படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.