புது டெல்லி:

ந்திய, சீன துருப்புக்கள் பரஸ்பர முறையில் லடாக் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகள் இடையேயான இரண்டாம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ள இந்த பேச்சுவார்த்தை கிழக்கு லடாக் பகுதியில் இன்று நடக்க உள்ளது.

மேலும் அந்த தகவலில், இதற்கு முன்பு இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் தூரம் பின் வாங்கியது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதனிடையே, லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இருத்தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பியது. இதனால் எல்லையில் பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் பின் வாங்கியது.

இந்நிலையில், இரு நாடுகள் இடையேயான இரண்டாம் கட்ட ராணுவ பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.