புதுடெல்லி:

டெல்லி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காலியாக இருக்கும் படுக்கைகள் குறித்த தகவல்களை மருத்துவமனையின் மெயின் கேட் அருகே பிளக்ஸ் போர்டு வைத்து தெரியப் படுத்த வேண்டும் என்று டெல்லி அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

அணமையில், கொரோனா பாதிப்புக்குள்ளான சில குடும்பத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, அவர்கள் சென்ற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்க போதுமான படுக்கை அறை இல்லை என்று திருப்பி அனுப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்தே டெல்லி அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், நகரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், படுக்கை காலியாக இல்லை என்று தெரிவிப்பதாக நோயாளிகள் புகார் தெரித்துள்ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், அனைத்து மருத்துவமனைகளின் மெயின் கேட் அருகே, 12 அடிக்கும் 10 அடி என்ற அளவில் பிளக்ஸ் போர்டு வைத்து, அதில், மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை அறைகளின் விபரங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிளக்ஸ் போர்டு 50-க்கும் மேற்பட்ட படுக்கை கொண்ட மருத்துவமனைகளில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த போர்டில், டெல்லி கொரோனா ஆப் குறித்த விபரங்கள் மற்றும், டெல்லி கொரோனா இணையத் தளம் குறித்த தகவல் மற்றும் காலியாக உள்ள படுக்கைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலி படுக்கைகள் குறித்த தகவல்கள் சரியாக இருக்கும் போதும், படுக்கை காலி இல்லை என்று மருத்துவமனைகள் மறுத்தால், இதுகுறித்து 1031 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.