டெல்லி: இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந், பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் நாட்டின் விமான படை வீரர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரதமர் மோடி தனது  டிவிட்டர் பக்கத்தில், வாழ்த்துடன்  இந்திய விமான படை வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.  நமது நாட்டின் வான் பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். தாய் நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பதிவில்,  நாட்டின் வான் பகுதியை பாதுகாப்பதில் vஇமான படை வீரர்கள் செய்த பங்களிப்பிற்கு,  IAF வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது என்றும்,

“ரஃபேல், அப்பாச்சி மற்றும் சினூக் ஆகியவற்றின் வருகை மூலம் இந்திய விமான படை, நவீனமயமாக்கப்பட்டு, மேலும் அபரிமிதமான சக்தியை பெற்றுள்ளது. வருங்காலத்திலும் அவர்கள் இதே போன்று தங்களை நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,  என்று தெரிவித்து உள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  நவீனமயமாக்கல் மற்றும் சுதேசமயமாக்கல் மூலம் விமான படையின் திறன்களை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.  “விமானப்படை தினம் -2020 ஐ முன்னிட்டு விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். எண்பத்தெட்டு ஆண்டுகால அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் வீரம்,  விமான படை பயணத்தை குறிக்கிறது, இது இன்று அளவிட முடியாத சக்தியுடன் திகழ்கிறது,” என்று வாழ்த்தி உள்ளர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “இந்திய விமானப்படை தின வாழ்த்துக்கள்! நமது வான் பிரதேசத்தை பாதுகாப்பது முதல், அனைத்து பிரச்சனைகளிலும் உதவுவது வரை, நமது துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர். நமது வலிமைமிக்க விமான வீரர்களின் வலிமையான கரங்களுக்கு மேலும் வலு சேர்க்க,  மோடி அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது, ” என கூறினார்.

விமானப் படை தினத்தையொட்டி,  இன்று  காஜியாபாத்தின் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் ஐ.ஏ.எஃப் தின அணிவகுப்பு நடைபெறுகிறது.