டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் – ஜூலை மாதத்தில் இலங்கை செல்ல இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் திட்டமிட்டவாறு நடக்க வாய்ப்பு இல்லை என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்தது. இதையடுத்து இந்த தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி பங்கேற்பது சாத்தியமில்லை என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாது என்று பிசிசிஐ தெரிவித்துக்கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் ஜூன் 24ம் தேதி முதல் இலங்கையில் 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தது. அதே போன்று ஜிம்பாப்வேவில் வரும் ஆகஸ்ட் 22 முதல் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.