டில்லி

நாட்டில் 19 இடங்களில் பாதுகாப்பை வலுவாக்க 19 இடங்களில் போர் விமானங்கள் தரை இறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 925 ஏ பகுதியில் இன்று போர் விமானங்கள் சாலையில் தரை இறங்கும் வசதி தொடங்கப்பட்டது.  இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் மத்திய சாலை  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இவர்களுடன் அமைச்சர் கெஜேந்திர சிங் ஷெகாவத், ராணுவப் படை தலைவர் பிபின் ராவத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் நிதின் கட்கரி, “முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும்.  ராணுவ விமானங்கள் சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அதிவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது. நமது தேசிய நெடுஞ்சாலைகளை இனி ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.